

தேவயானி கோப்ரகடேவின் பெயர் அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களை கண்காணிக்கும் பட்டியலில் இடம் பெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்குள் நுழைய தேவயானிக்கு தடை விதித்துள்ளது அந்நாடு.
விசா மோசடியில் சிக்கிய இந்திய துணைத் தூதர் தேவயானி நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு தேவயானி இந்தியா திரும்பினார்.
இந்நிலையில், தேவயானி கோப்ரகடேவின் பெயர் அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களை கண்காணிக்கும் பட்டியலில் இடம் பெறும் எனவும் மீண்டும் அமெரிக்கா திரும்பினால் அவர் மீது பிடி ஆணைப் பிறப்பிக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும், தேவயானி இந்தியா திரும்பிவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு எந்த வகையிலும் பலமிழந்துவிடவில்லை என தெரிவித்தார்.
இந்திய துணைத் தூதர் தேவயானிக்கு வழங்கப்பட்டுள்ள தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், அதற்கு இந்தியா மறுத்துவிட்டது.