Last Updated : 25 Feb, 2014 09:18 AM

 

Published : 25 Feb 2014 09:18 AM
Last Updated : 25 Feb 2014 09:18 AM

கடற்கொள்ளை தடுப்புச் சட்டம் இத்தாலி வீரர்களுக்கு பொருந்தாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கேரள கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல் லப்பட்ட வழக்கில், கடற் கொள்ளை தடுப்புச் சட்டம் இத்தாலி கடற்படை வீரர் களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இத்தாலி கடற் படை வீரர்கள் இருவரும் மரண தண்டனையிலிருந்து தப்பியுள் ளனர்.

கடந்த 2012 பிப்ரவரியில் கேரள மாநில எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்குக் கப்பலில் இருந்த இத்தாலிய கடற்படை வீரர்கள், இந்திய மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று கருதி சுட்டனர். இதில் 2 இந்திய மீனவர்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக இத்தாலிய கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ லத்தோர், சால்வடோர் ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் கடற்கொள்ளை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப் புள்ளது.

இந்நிலையில் தங்கள் நாட்டு கடற்படை வீரர்கள் மீது கடற் கொள்ளை தடுப்புச் சட்டத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறக் கோரியும் அவர்களை விடுவிக்கக் கோரியும் இத்தாலி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், செல்லமேஸ்வரர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி ஆஜராகி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.

அதில் கடற்கொள்ளை தடுப்புச் சட்டம் இத்தாலி கடற்படை வீரர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி கடற்படை வீரர்களுக் காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோட்டகி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு இழுத்தடிக்கப் படுகிறது, கடற்கொள்ளை தடுப்புச் சட்ட நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, நடுநிலையான பொதுவான விசாரணை அமைப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது, அதன்படியே தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது என்றார்.

மத்திய அரசின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய இத்தாலி கடற்படை வீரர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தனர்.

இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x