எதிர்ப்புகளை மீறி இலங்கை சென்றடைந்தார் சல்மான் குர்ஷித்

எதிர்ப்புகளை மீறி இலங்கை சென்றடைந்தார் சல்மான் குர்ஷித்
Updated on
1 min read

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தவிர, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் இலங்கை மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவிற்கு தலைமை ஏற்று மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று கொழும்பு இலங்கை சென்றடைந்தார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவில்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பணயம் வைக்கக் கூடாது. இருநாட்டு உறவை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று சல்மான் குர்ஷித்தை சந்தித்தனர். இலங்கை சிறையில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in