Last Updated : 27 Jan, 2017 03:01 PM

 

Published : 27 Jan 2017 03:01 PM
Last Updated : 27 Jan 2017 03:01 PM

ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரின் பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்களில் மேலும் 4 பேரின் உடல் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்ததுள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் ராஜேஷ் கைலா 'தி இந்து' ஆங்கிலத்திடம் கூறும்போது,"பனிச்சரிவில் காணாமல் போன 4 வீரர்களின் உடல் மீட்கப்பட்டது" என்றார்.

2 இடங்களில் பனிச்சரிவு:

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 2 இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பண்டிப்போரா மாவட்டம், குரேஸ் பகுதியில் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகில் ராணுவ முகாம் உள்ளது. ராணுவ முகாமை ஒட்டிய பகுதியில் புதன்கிழமை மாலை பனிச்சரிவு ஏற்பட்டதில் ராணுவ வீரர்கள் பலர் அதில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 7 வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் மீட்புக்குழுவினர் வியாழக்கிழமை 3 வீரர்களைச் சடலமாக மீட்டனர்.

அதேபோல் குரேஸ் பகுதியின் மற்றொரு இடத்தில் புதன் மாலை ஏற்பட்ட பனிச் சரிவில் ராணுவ ரோந்து குழுவினர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து இங்கும் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இங்கிருந்து இதுவரை 7 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.

புதன்கிழமை காலை, காஷ்மீரில் 2 இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கந்தர்பால் மாவட்டம், சோனாமார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ மேஜர் அமித் என்பவரும், பண்டிப்போரா மாவட்டம் குரேஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இறந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x