Published : 03 Feb 2017 04:33 PM
Last Updated : 03 Feb 2017 04:33 PM
வரதட்சணைக்குக் காரணம் பெண்களின் அழகின்மையே என மகாராஷ்டிரா பாடப் புத்தகத்தில் காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் அழகின்மை மற்றும் உடல் குறைபாடுடன் இருப்பதுவே மணமகன் வீட்டார் வரதட்சணை வாங்க காரணம் என்று மகராஷ்டிரா பாடப் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
வரதட்சணை ஒழிப்பது தொடர்பாக சமூகத்தில் குரல்கள் ஓங்கிவரும் நிலையில், பள்ளி பாடப் புத்தகத்தில் வரதட்சணை வாங்கப்பட இத்தகைய காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் முரணாக பார்க்கப்படுகிறது.
மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள பள்ளிகளில், பன்னிரெண்டாம் வகுப்பு சமூகவியல் பாடப் பிரிவில், "இந்தியாவில் உள்ள சமூகப் பிரச்சினைகள்" என்ற தலைப்பின் கீழ் வரதட்சணை வாங்குவதற்கு பெண்களின் அழகின்மை மற்றும் உடல் குறைபாடு காரணம் என கூறப்பட்டுள்ளது.
வரதட்சணை வாங்குவதற்குக் காரணமாக பாடப் புத்தகத்தில், "ஒருவேளை மணபெண் அழகற்றவராகவும், உடல் குறைபாடுடனும் இருக்கும்போது அவருக்கு திருமணம் நிகழ்வது கடினம். இம்மாதிரியான பெண்களை மணம் முடிப்பதற்கு, மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கின்றனர்.
இந்த கையறு நிலையில் பெண்ணின் வீட்டார் மணமகன் வீட்டார்க்கு வரதட்சணை வழங்குகின்றனர். இதுதான் இந்தியாவில் வரதட்சணை பழக்கத்தில் இருக்கக் காரணம்" என்ற வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட உயர் நிலை மற்றும் மேல் நிலை கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
கல்விக் குழு தலைவர், கங்காதர் மாமானே கூறும்போது, "இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே கருத்து கூற முடியும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT