ஜெயலலிதா வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகவல்

ஜெயலலிதா வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகவல்
Updated on
1 min read

ஜெ. சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் நால்வரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா எழுதியுள்ள சுயசரிதையில், தனக்கு பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்தன. சட்டத்தின் பாதையில் நீதியை நிலைநாட்ட பல்வேறு தடைகள் போடப்பட்டது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நீதியை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ள அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆச்சார்யாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்’’என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘மூல வழக்கான ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, இம்மனுவை விசாரணை செய்கிறோம்’’ எனக்கூறி 4 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in