Published : 25 Jun 2016 04:50 PM
Last Updated : 25 Jun 2016 04:50 PM
பிஹாரில் பஞ்சாயத்து சமிதி தேர்தலில் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன மித்லேஷ் தேவி என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்னதாக மித்லேஷ் தேவி என்ற இந்தப் பெண் தனது கணவனால் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 10 கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இதே மித்லேஷ் தேவி பெயரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு திகவ்லி பஞ்சாயத்து சமிதிக்கு உறுப்பினராக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவலமும் நடந்துள்ளது.
ஆனால் அதிகாரிகள் இதனை சோதனைச் செய்தபோது மித்லேஷ் தேவி அவரது கணவனால் 9 ஆண்டுகளுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இவரது கணவர் சிகந்தர் முகியா இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி. ஆனால் சிகந்தர் இந்த வழக்கில் இன்னமுமே தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிகந்தர் தனது 2-வது மனைவி குதியா தேவி என்பவரை தனது முதல் மனைவியின் ஆவணங்கள் மூலம் பஞ்சாயத்து சமிதி தேர்தலில் நிறுத்த முயற்சி செய்திருப்பார். கொலைக்குற்றவாளியான இவர் இதன் மூலம் குற்றத்திலிருந்து தான் விடுவிக்கப்படுவோம் என்று நினைத்திருக்கலாம்” என்று கூறினார்.
இதனையடுத்து சிதமார்ஹி மாவட்ட நீதிபதி ராஜீவ் ரோஷன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT