

புனித கங்கை தீர்த்தத்தை பக்தர்களின் வீட்டுக்கே தபால் மூலம் அனுப்பும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்திய தபால் துறையின் மூலம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தை, மத்திய தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்று பாட்னாவில் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் படி, கங்கோத்ரி மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட கங்கையின் புனித நீர், புட்டிகளில் அடைக்கப்பட்டு அனைத்து தபால் நிலையங்களிலும் விற்கப்படும். தேவைப்படுவோருக்கு, முகவரி தேடி தபால் மூலம் புனித நீர் அனுப்பி வைக்கப்படும்.
திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ‘மிக குறுகிய காலத்தில் திட்டம் செயல்வடிவம் பெற்றுவிட்டது. கடந்த மே 30-ம் தேதி விவாதிக்கப்பட்ட இத்திட்டம், 2 மாதத்தில் தொடங்கிவிட்டது. இத்திட்டம் வெற்றி பெறுவதில், தபால் துறையின் நம்பகத்தன்மை மிக முக்கிய பங்காற்றும்’ என்றார்.
இ-காமர்ஸ் இணைய தளங்களின் மூலம் சில தனியார் அமைப்புகள் கங்கை தீர்த்தத்தை அனுப்பி வருகின்றன. கோமுகியில் இருந்து சேகரிக்கப்படும் இந்த புனித நீர் லிட்டர், ரூ.299 என்ற விலையில் விற்கப்படுகிறது.-பிடிஐ