

நாடு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு புதுமையான, உண்மையான, நடைமுறைப்படுத்த முடிகிற தீர்வுகளைக் கண்டறியும் உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கு ரூ.1 கோடி பரிசளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறும்போது, ''பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்ட மாணவர்கள் உரிய சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளது.
உடல்நலம், கணினி, தொழில்நுட்பம், ஆற்றல் உருவாக்கம் (புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய, காற்று, அலை ஆற்றல்கள்), குறைந்த விலையில் வீடுகள், மலிவு விலை மருந்துகள், கல்வி, விவசாயம், நீர் ஆதாரங்கள், ஆற்றுப் பாசனங்கள், உள்கட்டமைப்பு, பாதுகாப்புத்துறை, சைபர் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, சூழலியல் மற்றும் பருவநிலை மாற்றங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் குறிப்பிடத்தக்க தீர்வுகளைக் கண்டறியும் மாணவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
ஐடியாஸ் (Innovations for Development of Efficient and Affordable Systems) என்னும் திட்டத்தின் கீழ் மேற்கண்ட துறைகளில் தலைசிறந்த தீர்வுகளைக் கண்டறியும் ஒவ்வொரு துறை மாணவருக்கும் ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும்.
பிரச்சினைகள் குறித்த அறிக்கை
மேற் கூறப்பட்டுள்ள அனைத்துத் துறைகள் அல்லது கருப்பொருள்களுக்கு, 10 பிரச்சினைகளை உள்ளடக்கிய அறிக்கை தயார் செய்யப்பட்டு, விளம்பரப்படுத்தப்படும். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இதில் கலந்துகொள்ளலாம். குறிப்பாக ஐஐடி, என்ஐடி, சிஎஃப்டிஐ ஆகிய கல்வி நிறுவனங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.