Published : 09 Jan 2017 07:10 PM
Last Updated : 09 Jan 2017 07:10 PM

பெட்ரோல் பங்க்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் திடீரென அறிவித்தன. இதனால் அதிருப்தி அடைந்த பெட்ரோல் விற்பனையாளர்கள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையை நிறுத்திக் கொள்ளப் போவதாக எச்சரித்தன.

ஏற்கெனவே பணப் புழக்கம் குறைந்ததால் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருந்த பொதுமக்களுக்கு, பெட்ரோல் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து தங்களது முடிவை வரும் 13-ம் தேதி வரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தள்ளி வைப்பதாக அறிவித்தன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தர்மேந்திரா பிரதான், ‘‘டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும், மக்களுக்கும் எவ்வித கூடுதல் சுமையும் அளிக்கப்படாது. 13-ம் தேதிக்கு பிறகும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை’’ என்றார்.

மேலும் கார்டு பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் தொகையை யார் ஏற்பது என்பது குறித்து பெட்ரோலிய நிறுவனங்களுடன் வங்கிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரதான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x