Published : 22 Nov 2014 10:18 AM
Last Updated : 22 Nov 2014 10:18 AM
கர்நாடகத்தில் உள்ள தலித், பழங்குடி இனங்களை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக 48,613 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பாக கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கர்நாடகத்தில் பெரிய விவசாயிகள் காவிரி, கபினி, துங்கபத்ரா உள்ளிட்ட ஆறுகளின் பாசன வசதி பெற்று கரும்பு, நெல், வாழை பயிரிடுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் அதிக அளவில் லாபம் ஈட்டி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் கொண்ட சிறு, குறு ஏழை விவசாயிகள் இத்தகைய லாபத்தை எட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
விவசாயத்துக்காக கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் திணறுகின்றனர். எனவே, அவர் கள் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.
கர்நாடகத்தில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி களில் 80 சதவீதமானவர்கள் சிறு, குறு ஏழை விவசாயிகள் என தெரிய வந்துள்ளது. எனவே சிறு, குறு மற்றும் தலித், பழங்குடியின மக்களின் நலனுக்காக கர்நாடக அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சமூக நலத்துறையின் சார்பாக இந்த ஆண்டு தலித், பழங்குடி இனங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளுக்காக 48,613 ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிணறு வெட்டுவதற்காக தலா ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடனும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் முறை
இதில் டாக்டர் அம்பேத்கர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக 28,666 ஆழ்துளை கிணறுகளும், தேவராஜ் அர்ஸ் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 5,995 ஆழ்துளை கிணறுகளும், கர்நாடக வால்மீகி மேலவை சார்பில் 13,952 ஆழ் துளைக் கிணறுகளும் அமைக்கப் படவுள்ளன. வரும் மார்ச் மாதத்தில் 48,613 ஆழ்துளைக் கிணறுகளும் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
சிறு விவசாயிகள் நீர்ப்பாசன வசதியின்றி தவிப்பதை தடுப்பதற்காக நாட்டிலே முதல்முறையாக கர்நாடகத்தில் இம்முறை முழு வீச்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் கிணறுகளுக்கு, 3 மாதங்களில் சூரிய ஒளி மின் கொள்கையின்படி இலவச மின்சார வசதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT