

உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகரில் கலவரத்தைத் தூண்டும் வகையில், போலி வீடியோவை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கீத் சோமை அவரது தொகுதியான சர்தானாவில் கடந்த 21-ம் தேதி உத்தரப் பிரதேச போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, முஸாஃபர்நகரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, பாஜகவின் மற்றொரு எம்.எல்.ஏ. சுரேஷ் ராணாவை வெள்ளிக்கிழமை லக்னோ போலீஸார் கைது செய்தது. அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், பிஜேபி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
முசாஃபர்நகரில் கடந்த 7-ம் தேதி நடந்த கலவரத்தில் 48 பேர் உயிரிழந்ததும், 43 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.