Published : 21 Mar 2014 01:16 PM
Last Updated : 21 Mar 2014 01:16 PM

மும்பை இளம்பெண் பலாத்காரம்: 4 பேருக்கு ஆயுள் : பெண் பத்திரிகையாளர் வழக்கில் 24-ல் தீர்ப்பு

மும்பை இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மும்பையில் உள்ள பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் 2013-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்த 18 வயது பெண்ணை விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி, அஸ்பாக் ஷேக் மற்றும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதே வளாகத்தில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி செய்தி சேகரிப்பதற் காக ஆண் ஒருவருடன் 22 வயது பெண் பத்திரிகையாளர் சென்றார். அவரை விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி, சிராஜ் ரெஹ்மான் மற்றும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் 7 பேரையும் மும்பை போலீஸார் கைது செய்தனர். இந்த இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 சிறுவர்கள் மீதான விசாரணை, சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மற்ற 5 பேர் மீதான வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஷி, அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று மார்ச் 20-ம் தேதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள், மார்ச் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி டெலிபோன் ஆபரேட்டர் பெண் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீர்ப்புக் கூறினார்.

இது தொடர்பாக நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில் கூறியிருப்பதாவது: “குற்றம் சாட்டப்பட்டுள்ளோரின் செயல், சம்பந்தப் பட்ட பெண்ணுக்கும், சமூகத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டு, மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி, அஸ்பாக் ஷேக் ஆகியோர் இக்குற் றத்தை திட்டமிட்டு செய்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த தீர்ப்பு மார்ச் 24-ம் தேதி வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி ஆகியோர் இரு வழக்குகளிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். டெலிபோன் ஆபரேட்டர் பெண் பலாத்கார வழக்கில் மூவரும் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். இந்நிலையில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிஹம், இந்த மூவர் மீதும் கூடுதல் குற்றச்சாட்டுகளை சுமத்தி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், மூவரும் இருமுறை பாலியல் பலாத்கார குற்றச் செயலில் ஈடுபட்டுள் ளனர். எனவே, அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 376 (இ) ன்படி அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

376 (இ) ன்படி அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x