Published : 26 Feb 2017 11:37 AM
Last Updated : 26 Feb 2017 11:37 AM
ராஜ்கோட் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமின் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் குஜராத் மாநிலத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் ஒரு தொழிலதிபரை கொலை செய்யும் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இதுகுறித்து ராஜ்கோட் நகர காவல் துறை அதிகாரி (டிசிபி) எஸ்.ஆர்.ஒதேதரா கூறியதாவது:
சந்தேகத்துக்குரிய 4 பேர் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தனியார் பஸ் மூலம் ராஜ்கோட் நகருக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராஜ்கோட் - அகமதாபாத் நெடுஞ்சாலையில் குவதவா நகருக்கு அருகே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒரு பஸ்ஸை சோதனையிட்டதில் சந்தேகிக்கப்படும் வகையில் பயணித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிட மிருந்த துப்பாக்கி, 2 கத்திகள், போலி வாகன நம்பர் பிளேட்கள் இருந்தன. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை கொல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் பாகிஸ்தானில் வசித்து வருவதாக நம்பப்படும் தாவூத் இபாராஹிமின் சட்டவிரோத தொழிலை அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம் கவனித்து வருகிறார். இவர்தான் குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளரை கொலை செய்வதற்காக கூலிப்படையை நியமித்துள்ளார் என்பதும் இதற்காக ரூ.10 லட்சம் தர ஒப்புக்கொண்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் ராம்தாஸ் ரஹானே என்பவர் தாவூதின் கூலிப்படையைச் சேர்ந்தவன் என்பதும் இவர் மீது மகாராஷ்டிராவில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT