திருச்சானூர் பிரம்மோற்சவம்: பெரிய சேஷ வாகன உலா

திருச்சானூர் பிரம்மோற்சவம்: பெரிய சேஷ வாகன உலா
Updated on
1 min read

திருச்சானூர் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை, பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி அருகே உள்ள அலர்மேலு மங்காபுரம் எனப்படும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில், முதல் நாள் இரவு, உற்சவரான தாயார், சின்ன சேஷ வாகனத்தில் பவனி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனை தொடர்ந்து நேற்று இரண்டாம் நாள் காலை ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் முதல் நாள் இரவு முதல் வாகனமாக வரும் பெரிய சேஷ வாகனம், பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தில் 2-ம் நாள் காலை வாகனமாக பவனி வருவது குறிப்பிட தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசித்தனர். வாகனத்துக்கு முன் பண்டிதர்கள் வேதம் ஓத, யானை, குதிரை போன்ற பரிவட்டங்களுடன், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கண்கவரும் வகையில் இருந்தது. பின்னர் மதியம் கோயில் வளாகத்தில் தாயாரின் உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சன சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் 9 விதமான மாலைகள் அணிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இரவு பத்மாவதி தாயார் அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பெரிய சேஷவாகனத்தில் உலா வந்து அருள்பாலித்த பத்மாவதி தாயார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in