Published : 29 Jun 2017 07:02 PM
Last Updated : 29 Jun 2017 07:02 PM
பிஹாரில் மெகா கூட்டணியை உடைக்க முடியாது என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறினார்.
பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, கடந்த 1990-களில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் லாலு மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 3 வழக்கு விசாரணைகளில் ஆஜராக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு லாலு இன்று வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி வைத்துள்ளன. இந்தக் கூட்டணியை உடைக்க முடியாது. எங்கள் கூட்டணியை உடைக்க யார் எப்படி முயற்சித்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை.
லாலு - நிதிஷ் குமார் கூட்டணி உடைக்க முடியாதது. உளியால் கூட இந்தக் கூட்டணியை உடைக்க முடியாது. எங்கள் கூட்டணியை உடைக்க நரியைப் போல பிஹார் பாஜக தலைவர் சுஷில்குமார் முயற்சி செய்கிறார். அவரது முயற்சி பலிக்காது'' என்று லாலு பிரசாத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT