

பிஹாரில் மெகா கூட்டணியை உடைக்க முடியாது என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறினார்.
பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, கடந்த 1990-களில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் லாலு மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 3 வழக்கு விசாரணைகளில் ஆஜராக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு லாலு இன்று வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி வைத்துள்ளன. இந்தக் கூட்டணியை உடைக்க முடியாது. எங்கள் கூட்டணியை உடைக்க யார் எப்படி முயற்சித்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை.
லாலு - நிதிஷ் குமார் கூட்டணி உடைக்க முடியாதது. உளியால் கூட இந்தக் கூட்டணியை உடைக்க முடியாது. எங்கள் கூட்டணியை உடைக்க நரியைப் போல பிஹார் பாஜக தலைவர் சுஷில்குமார் முயற்சி செய்கிறார். அவரது முயற்சி பலிக்காது'' என்று லாலு பிரசாத் கூறினார்.