

குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போது, குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. மொத்தம் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர், ஒருவரைக் காணவில்லை. கடந்த 2-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் 24 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்; 36 பேர் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கின் தண்டனை விவரம் நேற்றைய தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், ஜூன் 10-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வாளிகள் என அறிவிக்கப் பட்ட 24 பேரில், 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. தண்டனை விவரம் தொடர்பான விவாதத்தின்போது, இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும்படி அரசு தரப்பு கோரும் எனத் தெரிகிறது.