Published : 04 Dec 2013 09:30 AM
Last Updated : 04 Dec 2013 09:30 AM

சிறையில் இருந்தபடி ‘பேஸ்புக்’கில் தகவல் வெளியிட்ட கேரள விசாரணைக் கைதிகள்

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் டி.பி. சந்திர சேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள விசாரணை கைதிகள், செல்போன் மூலம் பேஸ்புக்கில் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

சிறை விதிமுறைகளை மீறியுள்ள அவர்களை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய டி.பி.சந்திர சேகரன் அவரது சொந்த கிராமமான ஒஞ்சியத்தில் 2012-ம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் உள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறை விதிமுறை களை மீறி, தங்களின் நவீன செல்போன்களை பயன்படுத்தி பேஸ்புக் இணையதளத்தில் தகவல் களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதை தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியது. சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, விசாரணை கைதிகள் சிலர் தங்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதை அந்த தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியது.

அமைச்சர் மீது விமர்சனம்

இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் கடும் நெருக்குதல் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. கண்ணூர் கே. சுதாகரன் கூறுகையில், “டி.பி. சந்திரசேகரன் கொலை வழக்கை கையாள்வதில் தொடக்கம் முதலே ஏகப்பட்ட குளறுபடிகள் காணப்படுகின்றன.

மார்க்சிஸ்ட் கட்சியினர் சம்பந்தப் பட்டுள்ள கொலை வழக்குகளை காங்கிரஸ் கட்சியினரின் உணர்வு களை புரிந்து கொள்ளாமல் ராதாகிருஷ்ணன் கையாண்டு வருகிறார்” என்றார்.

ராஜிநாமா செய்ய மாட்டேன்

சுதாகரனுக்கு பதிலடி தரும் விதமாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

“என்னை அமைச்சராக தேர்வு செய்தவர்களுக்குத்தான், ராஜிநாமா செய்யுமாறு என்னிடம் கோர உரிமையுள்ளது. சுதாகரனைப் போன்றோரின் தேவையற்ற விமர்சனங்களுக்கும், அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய மாட்டேன்” என்றார்.

வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை

முன்னதாக கோழிக்கோடு சிறைக்கு சென்று ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“சிறை விதிகளை மீறி செல் போனை பயன்படுத்திய விசாரணை கைதிகளை வேறு சிறைக்கு மாற்று வது குறித்து நீதிமன்றம்தான் உத்தர விட முடியும். இது தொடர்பாக சிறப்பு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தி டம் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்படும்” என்றார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கேரள மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னி தலா கூறுகையில், “சிறையில் நடை பெற்ற சம்பவம், மக்கள் மனதிலும், காங்கிரஸ் கட்சியினரிடையேயும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக எங்களின் கருத்தை முதல்வர் உம்மன் சாண்டியிடம் தெரிவிப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x