Last Updated : 02 Mar, 2017 10:17 AM

 

Published : 02 Mar 2017 10:17 AM
Last Updated : 02 Mar 2017 10:17 AM

குழந்தைகள் கடத்தலில் பாஜக பெண் தலைவர் கைது: இந்திய நேபாள எல்லையில் சிக்கினார்

மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை கள் கடத்தலில் தொடர்புடைய பாஜக பெண் தலைவரை இந்திய நேபாள எல்லையில் சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் அடிக்கடி குழந்தைகள் காணாமல் போயின. இதுகுறித்து சிலிகுரி சிஐடி போலீஸ் சிறப்பு கண்காணிப்பாளர் அஜய் பிரசாத் நேற்று செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘சிலி குரியின் கரிபாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட படாசி பகுதியைச் சேர்ந்த 17 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக பாஜக பெண் தலைவர் ஜூகி சவுத்ரியின் பெயரும் சேர்க்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய நேபாள எல்லையில் செவ்வாய்க்கிழமை இரவு சிஐடி போலீஸார் ஜூகி சவுத்ரியை கைது செய்தனர். அவரை தற்காலிகமாக சிஐடி முகாமிட்டு பின்டெல் கிராமத்துக்கு அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்’’ என்றார்.

முன்னதாக குழந்தைகள் கடத்தல் வழக்கில் சந்தான சக்கரவர்த்தி என்பவரைக் கடந்த மாதம் தொடக்கத்தில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போதுதான் ஜூகி சவுத்ரி மீது அவர் குற்றம் சாட்டினார்.

ஜல்பைகுரியில் ‘பிமாலா சிஷு கிரிஹோ’ என்ற பெயரில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தின் தலைவராக சந்தான சக்கரவர்த்தி இருந்துள்ளார். குழந்தைகளை கடத்தி விற்பதற்கு உதவி செய்த தத்தெடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி சோனாலி என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தைகள் கடத்தலில் ஜூகி சவுத்ரிதான் முக்கிய பங்கு வகித் தார். எங்களுக்கு சம்பந்தமில்லை. அவர்தான் டெல்லிக்கு அழைத்துச் சென்று பாஜக தலைவர்களுடன் பேசினார். நான் தனி அறையில் இருந்தேன் என்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனாஸ் பவுமிக் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, ‘‘குழந்தைகள் கடத்தலில் ஜூகி சவுத்ரி பாஜக வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும் இந்தப் பிரச்சினையில் அவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இது அரசியல் சதி. குழந்தைகள் தத்தெடுப்பு மைய கமிட்டியில் ஜூகி உறுப்பினராக இல்லை. ஜூகி மீது தவறு இருந்தால், சட்டம் அதன் கடமையை செய்யட்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x