கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் தபால் தலை: பிரதமர் வெளியிட்டார்

கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் தபால் தலை: பிரதமர் வெளியிட்டார்
Updated on
1 min read

மறைந்த கஜல் பாடகர் ஜக்ஜித் சிங்கின் உருவம் பொறித்த தபால்தலையை பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை வெளியிட்டார். ஜக்ஜித் சிங் கடந்த அக்டோபர் 2011-ல் காலமானார். அவருக்கு தபால் தலை வெளியிட்டு பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

இந்திய இசை வரலாற்றில் ஜக்ஜித் சிங்குக்கு சிறப்பிடம் உண்டு. அவர் தற்போது நம்மிடையே இல்லை. ஆனால், அவரின் மயக்கும் குரல் எப்போதும் நம் இதயத்தை வருடிக்கொண்டே இருக்கும். அவர் கஜலைப் பாடிய பாணி, இந்தியாவில் அக்கலைக்கு புதிய வடிவம் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. மேற்கத்திய இடைக்கருவிகளை கஜல் பாடல்களில் பயன்படுத்தி பரிசோதனை முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். அவரின் மனைவி சித்ரா சிங் அதற்கு உறுதுணையாக இருந்தார்.

ஜக்ஜித் சிங் போன்ற கலைஞர்கள் பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறப்பார்கள். அவரின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட முன்வந்ததற்காக அஞ்சல் துறையை நான் பாராட்டுகிறேன்” என்றார் பிரதமர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in