Published : 06 Nov 2014 10:16 AM
Last Updated : 06 Nov 2014 10:16 AM

கல்வித் தரம் மேம்படுத்தப்படும்: சந்திரபாபு நாயுடு தகவல்

மாணவர்களின் கல்வித் தரம் மேம்படுத்தப்படும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் கூறினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டம் குரபல கோட்டா மண்டலத்துக்குச் சென்றார். அங்கு, ஜன்ம பூமி அரசு திட்டத்தில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது:

விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க பல்வேறு நலத்திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் வங்கிக் கடன் தலா 1. 5 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயத் துக்கு தினமும் 7 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் பசுக்களுக்காக விடுதிகள் ஏற்பாடு செய்யப்படும். காங்கிரஸ் கட்சி சுயநலத்திற்காக மாநில பிரிவினை செய்தது. தெலங்கானா முதல்வர் என் மீது குற்றம் சாட்டுவதையே ஒரு கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறார். சித்தூர் மாவட்டத்தில் விரைவில் ஹந்திரி-நீவா குடிநீர் திட்ட கால்வாய் பணிகள் நிறைவேற்றப்படும் இதன் மூலம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீரும்.

தற்போதைய மாணவர்கள் நல்ல செயல்திறன் கொண்ட வர்களாக விளங்குகின்றனர். அவர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் குறித்து தனி வகுப்பு நடத்த வேண்டும். ஆந்திர மாநிலத்தில் கல்வித் தரம் உயர்த்தப்படும். வரும் 4 ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலத்தை 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உருவாக்குவதே லட்சியம்.

இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

முன்னதாக இலவச மருத்துவ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ, மாணவியரின் அறிவியல் கண் காட்சியை பார்வையிட்டு மாண வர்களை பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x