Published : 01 Nov 2014 09:36 AM
Last Updated : 01 Nov 2014 09:36 AM
கடந்த 10 மாதங்களில் பெங்களூரில் பள்ளிச் சிறுமிகள் 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருப்பதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பள்ளியின் இந்தி ஆசிரியர் ஜெய்சங்கர்(40) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் பள்ளியின் முன்பாக நேற்று ஆயிரக்கணக்கான பெற்றோர் களும்,பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பெங் களூரில் பெரும்பாலான பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
சிறுமியை பலாத்காரம் செய்த ஜெய்சங்கரை போலீஸார் பெங்களூர் மாநகர 10-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் ஜெய்சங்கருக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் பெங்களூரில் தொடரும் பாலியல் குற்றங்கள் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும்போது, ''இத்தகைய குற்றங்களுக்கு பள்ளி நிர்வாகமே முழு காரணம்.அவர்கள்தான் இதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.இதனை மதிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய விவகாரத்தில் போலீஸாரையும், அரசையும் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.அனைத்து சம்பவங்களும் பள்ளி வளாகத்துக்குள் நடந்திருக்கிறது. இருப்பினும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT