Published : 07 Mar 2014 07:39 PM
Last Updated : 07 Mar 2014 07:39 PM

மும்பையில் மேலும் ஒரு கப்பல் விபத்து: கடற்படை அதிகாரி உயிரிழப்பு

மும்பையில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மஸாகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.

கப்பலின் இன்ஜின் அறையில் சோதனை நடைபெற்றபோது கரியமிலவாயு கசிவு ஏற்பட்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களில் கடற்படையில் நிகழ்ந்த 11-வது விபத்து இதுவாகும்.

போர்க் கப்பல் கட்டுமானத்தில் ஈடுபட்டு வரும் மஸாகான் கப்பல் கட்டுமான நிறுவனம், ஐ.என்.எஸ். கொல்கத்தா (யார்டு 701) என்ற போர்க்கப்பலை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மும்பை துறைமுகத்தில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வார காலத்தில் ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பல், கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட இருந்தது.

இந்நிலையில், அந்த கப்பலின் இன்ஜின் பகுதியை சோதனையிடும் பணி வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் நடைபெற்றது. அப்போது கரியமில வாயு கசிவு ஏற்பட்டதில், கடற்படை கமாண்டர் குந்தன் வாத்வா (42) மூச்சுத் திணறி உயிரிழந்தார். மாஸாகான் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.

இது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து மும்பை காவல் துறை அதிகாரி கிருஷ்ண பிரகாஷ் கூறும்போது, “இந்த கப்பலின் இன்ஜின் உள்ளிட்ட பாகங்களின் செயல்பாடுகளை சோதனையிடும் பணி நடைபெற்று வந்தது. 6,500 டன் எடையுள்ள இந்த போர்க் கப்பல், வரும் மார்ச் 27-ம் தேதி கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட இருந்தது.

கப்பலின் இன்ஜின் அறையில் நடைபெற்ற சோதனையின்போது கரியமில வாயு கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், கடற்படை கமாண்டர் குந்தன் வாத்வா உயிரிழந்தார். மஸாகான் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர்” என்றார்.

கடற்படையில் கடந்த 9 நாள்களில் நிகழும் இரண்டாவது விபத்து இதுவாகும். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ஐ.என்.எஸ். சிந்துரத்னா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். 7 மாலுமிகள் காயமடைந்தனர். அதற்கு முன்பு ஜனவரியில் ஐ.என்.எஸ். ஐராவதம் கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளானது. 2013-ம் ஆண்டு டிசம்பரில் விசாகப்பட்டினத்தில் பழுதுநீக்கும் பணிக்காக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐ.என்.எஸ். கொங்கனில் தீ விபத்து ஏற்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மும்பை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐ.என்.எஸ். சிந்துரக்சா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x