Published : 26 Sep 2013 09:06 PM
Last Updated : 26 Sep 2013 09:06 PM

ஜம்மு தாக்குதலில் கர்னல், போலீஸார் உள்பட 10 பேர் பலி; பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

ஜம்முவில் உள்ள போலீஸ் நிலையம், ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை பயங்கரவாதிகள் வியாழக்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் லெப்டினென்ட் கர்னல் உள்பட 10 உயிரிழந்தனர்.

நான்கு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளையும் ராணுவ கமாண்டோக்கள் சுட்டு வீழ்த்தினர்.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ஹிரா நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு ராணுவ சீருடையில் 3 பயங்கரவாதிகள் வந்தனர். அவர்கள் ராணுவ உடையில் இருந்ததால் போலீஸாருக்கு முதலில் சந்தேகம் ஏற்படவில்லை.

திடீரென அவர்கள் கையெறி குண்டுகளை வீசி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், 4 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

பின்னர், ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலைக்கு வந்த அவர்கள், ஒரு டெம்போ லாரியை துப்பாக்கி முனையில் கடத்தி சம்பா மாவட்டம், மேஸர் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு வந்தனர். ராணுவ உணவகத்துக்குள் புகுந்த அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் நிராயுதபாணியாக இருந்த லெப்டினென்ட் கர்னல் விக்ரம்ஜித் சிங் உள்பட 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராணுவ கமாண்டோக்கள், துப்பாக்கியால் பதிலடி கொடுத்ததில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி நடைபெற்றது. தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎப் வீரர்களும் உள்ளூர் போலீஸாரும் இணைந்து கொண்டனர். சில மணி நேர தேடுதலுக்குப் பின்னர் 3-வது பயங்கரவாதியையும் ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர் அவர்கள் அனைவரும் 16 முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்கள்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்:

முதல் தாக்குதல் நடத்தப்பட்ட ஹிரா நகர் போலீஸ் நிலையம், சர்வதேச எல்லையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய தற்கொலைப் படை பயங்கரவாதிகள், முதலில் போலீஸ் நிலையத்தையும், பின்னர் ராணுவ முகாமையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பொறுப்பேற்பு:

இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவு அமைப்பான “ஷோகடா பிரிகேட்” என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர், தாக்குதலை நடத்திய 3 பேரும் உள்ளூர் இளைஞர்கள் என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் ஷிண்டே:

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x