Last Updated : 11 Jul, 2016 05:14 PM

 

Published : 11 Jul 2016 05:14 PM
Last Updated : 11 Jul 2016 05:14 PM

தீவிரவாதியும் நாயகனும்: காஷ்மீர் கலவர பின்னணியில் புர்ஹான் வானியின் டபுள் ரோல்

புர்ஹான் வானி (22) காஷ்மீரின் புதிய தலைமுறை கல்விப் பின்புலம் வாய்ந்த போராளிகளில் ஒருவர். இவர் இந்தியாவிடமிருந்து காஷ்மீர் விடுதலை பெற வேண்டும் என்று தனது கோரிக்கையை சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பி வந்தார்.

பதற்றமான காஷ்மீர் பகுதியில் இணையதளத்தின் பிரயோகம் வளர இவர் மூலம் அதுவே ஒரு தீவிரவாத தேர்ந்தெடுப்புக் களமாகவும் மாறியுள்ளது.

இவரை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர் செய்ய சற்றும் எதிர்பாராதவிதமாக எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் இளைஞர்கள் சாலைகளில் போர் புரியத் தொடங்கினர். கடும் வன்முறை வெடித்து சுமார் 23 பேர் பலியாகியுள்ளனர்.

புர்ஹான் வானி ஸ்கூல் ஹெட்மாஸ்டரின் மகன், பள்ளிப்படிப்பில் நன்றாக விளங்கிய புர்ஹான் வானி தனது 15-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி அந்தப்பகுதியின் மிகப்பெரிய போராளிக்குழுவுடன் இணைந்தார்.

வானி மற்றும் அவரது சகோதரரை அரசுப்படைகள் வீட்டுக்கு வரும் வழியில் நிறுத்தி அடித்து உதைத்து கடுமையாக இழிவு படுத்தியதாலேயே தீவிரவாதத்தை தனது பாதையாக வானி தேர்ந்தெடுத்ததாக அவரது தந்தை தெரிவித்தார்.

2014-ல் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அவரது தந்தை கூறும்போது, “இங்கு ஒவ்வொரு நாளும் அனுபவித்த இழிவு, சித்ரவதை காரணமாக வானி துப்பாக்கியில் சரணடைந்தான். சுடப்பட்டு இறப்பதில் என் மகன் முதலாவது அல்ல. ஆனால் தனது சுயமரியாதைக்காகவும் தன் மக்களுக்காகவும் அவன் உயிர்த்தியாகம் செய்திருப்பதால் அவன் தியாகி என்றே போற்றப்படுவான்.” என்றார்.

சிறுவயதிலேயே தனது செயல்பாடுகளினால் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பில் இன்றியமையாத ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார் வானி. ஹிஜ்புல் முஜாகிதீன் பாகிஸ்தானுடன் காஷ்மீர் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயக்கமாகும்.

அவர் உடனே சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தனது படங்கள், தான் கண்ட களங்கள் என்று துப்பாக்கியுடன் புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினார். தனது சக போராளிகள் குழுவுடன் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அதாவது தீவிரவாதி என்றால் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற மரபை மீறியதால் புர்ஹான் வானியை ஒரு ஹீரோவாகப் பின் தொடரும் இளம் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்தது.

அவரது பதிவுகள் பல்வேறு கணக்குகளிலிருந்து பதிவானதால் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் இவரது பதிவுகள், வீடியோக்கள் அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது.

21 வயதிலேயே மூத்த ஹிஸ்புல் கமாண்டராக ஆனார் வானி. இவரது மரணத்திற்குப் பிறகு உள்ளூர் செய்திகள் கூறுவதென்னவெனில் புர்ஹான் வானி பெயரில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதும், பள்ளிக் குழந்தைகள் இவரது வாழ்க்கையை நாடகமாக நடித்துக் காட்டுவதும் அங்கு ஒரு வழக்கமாகவே மாறியுள்ளது என்று கூறுகிறது.

சமூக வலைத்தளங்களில் புர்ஹான் வானியின் பொறிபறக்கும் செய்திகளினால் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இந்திய பகுதியில் உள்நாட்டிலேயே தீவிரவாதிகள் பலர் உருவாக வழிவகை செய்ததாக ராணுவமும் அரசு அதிகாரிகளும் கூறுகின்றனர். முன்னதாக பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உருவாகும் தீவிரவாதிகள் எண்ணிக்கையே அதிகமாக இருந்துள்ளது.

இவரது மூத்த சகோதரர் காலித் வானி கடந்த ஆண்டு கொல்லப்பட்டது புர்ஹான் வானி மீது பொதுமக்கள் கருணை காட்ட வழிவகுத்ததோடு, கோபாவேச ஆர்பாட்டமும் நடந்தது.

துப்பாக்கிச் சண்டையில் காலித் பலியானதாக அரசு தரப்பினர் கூறும் போது இவரது தந்தையோ காலித் உடலில் சித்ரவதை அடையாளங்கள் தெரிந்ததாகவும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த அடையாளம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

புர்ஹான் வானி தனது கடைசி வீடியோ பதிவில், காஷ்மீர் போலீஸார் இந்திய ஆக்ரமிப்பை ஆதரிக்கும் போக்கை நிறுத்த வேண்டும் என்றும் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

22 வயதில் இவரைப் பின்பற்றுபவர்கள் இவரை எந்த அளவுக்கு நம்பியிருந்தார்களேயானால் இவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டிருப்பார்கள்.

புர்ஹான் வானி என்கவுண்டர் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் செய்யும் போது, “என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - சமூக வலைத்தளம் மூலம் அவர் போராட்டத்துக்கு திரட்டிய உறுப்பினர்களை விட தற்போது தான் புதையுண்ட சுடுகாட்டிலிருந்து போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டும் எண்ணிக்கை அதிகமாகும் புர்ஹானின் திறமையை நாம் பார்க்கத்தான் போகிறோம்” என்று கூறியது புர்ஹான் வானி அங்கு எத்தகைய செல்வாக்குடன் இருந்திருக்கிறார் என்பதை தெரிவிப்பதாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x