Published : 31 Oct 2014 05:42 PM
Last Updated : 31 Oct 2014 05:42 PM

புனேயில் 6 மாடிக் கட்டிடம் தரைமட்டம்: 8 குடும்பங்கள் தப்பித்தன

புனேயில் ஓராண்டுக்கு முன்னதாகக் கட்டப்பட்ட 6 மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. ஒருவர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் 8 குடும்பங்கள் தப்பிப் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2013ஆம் ஆண்டு தானேயில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த துயரச்சம்பவத்திற்குப் பிறகு இன்று இந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேயில் உள்ள புறநகர்ப்பகுதியான நார்ஹே-அம்பேகானில் உள்ள இந்தக் கட்டிடம் இன்று காலை 3.30 மணிக்கு இடிந்து தரைமட்டமானது.

கட்டிடம் 3 மணி வாக்கில் பூகம்பம் வந்தது போல் ஆட, 8 குடும்பத்தின் உறுப்பினர்களும் பாதுகாப்பு இடம் தேடித் தப்பிச் சென்றதால் பிழைத்துள்ளனர். முழு கட்டிடமும் 3.30 மணிக்கு தரைமட்டமானது. அதற்குள்ளாக அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தனர்.

இது குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர், சந்திரசேகர் தைத்தங்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறுகையில், “3.05 மணிக்கு இந்தக் கட்டிடம் ஆட்டம் காணத் தொடங்கியது, 3.30 மணிக்கு இடிந்து விழுந்தது. ஒருவர் தவிர சுமார் 30 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். நாங்கள் கட்டிட அமைப்பை ஆராய்ந்து வருகிறோம், அனுமதி பெறாத கட்டிடம் போல் தெரிகிறது” என்றார்.

கட்டிடத்தை கட்டிய கிஷோர் வத்காமா கைது செய்யப்பட்டுள்ளார்.

இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் சந்தீப் மோஹிதே என்பவர் மற்ற குடியிருப்பாளர்களை எச்சரித்து விட்டு பேஸ்மெண்டில் உள்ள தனது 4 சக்கர வாகனத்தை அப்புறப்படுத்த சென்றுள்ளார். ஆனால் அதற்குள் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

அம்பேகான் பகுதியில் உள்ள 34 கிராமங்களில் குடியிருப்புக் கட்டிடங்கள் கட்ட காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ரூ.8 கோடியை ஒதுக்கியுள்ளதாக புனே நகர மேயர் தெரிவித்தார்.

இந்தக் கட்டிட இடிபாடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x