மணல் கொள்ளைக்கு எதிராக தர்ணா நடத்தியபோது விபரீதம்: ஆந்திராவில் மக்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து 20 பேர் பலி; 15 பேர் படுகாயம்

மணல் கொள்ளைக்கு எதிராக தர்ணா நடத்தியபோது விபரீதம்: ஆந்திராவில் மக்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து 20 பேர் பலி; 15 பேர் படுகாயம்
Updated on
1 min read

ஆந்திராவில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக வந்த லாரி புகுந்தது. இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ளது ஏர்பேடு போலீஸ் நிலையம். முனகல பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊரில் நடக்கும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, இந்த போலீஸ் நிலையம் முன்பாக அமர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக திருப்பதி காளஹஸ்தி இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் ரேணிகுண்டாவில் இருந்து கிருஷ்ணபட்டினம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏர்பேடு போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. பின்னர் போராட்ட கூட்டத்துக்குள் புகுந்து, அருகில் இருந்த கடையில் மோதி நின்றது. இந்த கோர விபத்தில் முனகல பாளைய கிராமத்தினர் 20 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் இரங்கல்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

விபத்து குறித்து ஏர்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததே விபத்து நடக்க காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in