

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய அரசின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல், அரசு அதிகாரிகளை சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதில் சிபிஐ-க்கு சிக்கல்கள் இருந்தன. மத்திய அரசின் ஒப்புதல் கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு முறையிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிமன்றங்கள் கண்காணிக்கும் வழக்குகளில் அரசு அதிகாரிகளை விசாரிக்க, அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இணைச் செயலர், அதற்கு மேலான பொறுப்புகளில் உள்ளவர்களை விசாரிப்பதற்கு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அரசு அதிகாரிகளை விசாரிப்பதில் அனுமதி பெற வேண்டும் என்ற மத்திய அரசு தரப்பிலான வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.