Last Updated : 28 Oct, 2015 08:48 AM

 

Published : 28 Oct 2015 08:48 AM
Last Updated : 28 Oct 2015 08:48 AM

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தல்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஆப்ரிக்காவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். இந்திய ஆப்பிரிக்க பொது மன்றத்தின் 3-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று பேசியதாவது:

இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் மக்கள் தொகை சுமார் 250 கோடியாக உள்ள போதிலும், அவற்றுக்கு சர்வதேச நிர்வாக அமைப்புகளில் உரிய பிரதிநிதித் துவம் தரப்படவில்லை. குறிப்பாக, இந்தியா, ஆப்ரிக்காவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்காமல் நீண்ட காலத்துக்கு தவிர்க்க முடியாது. அதிக நாடுகளைக் கொண்டு மிகப்பெரிய கண்டமாக விளங்கும் ஆப்ரிக்காவையும், உலகில் 6-ல் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவையும் நிர்வாக கட்டமைப்பில் சேர்க்காத ஒரு அமைப்பிடமிருந்து நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்?

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நா.பொது சபையின் 70-வது கூட்டத்தை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் உலகில் அமைதியை நிலைநாட்ட வும், சீரான வளர்ச்சியை உறுதி செய்யவும் சர்வதேச அமைப்பு களில் ஜனநாயக முறையிலான சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இடையி லான தொடர்புகள் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், இதை முறியடிக்க உளவு தகவல் பரிமாற்றம், பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்த முயற்சிக்கு சர்வதேச சமுதாயமும் ஒத்துழைப்பு வழங் கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சுஷ்மா தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x