Published : 20 May 2017 09:59 AM
Last Updated : 20 May 2017 09:59 AM

வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை: முடிந்தால் ‘ஹேக்’ செய்து நிரூபிக்கலாம் - தேர்தல் ஆணையம் சவால்

“மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களை, முடிந்தால் ‘ஹேக்’ செய்து நிரூபிக்கலாம்” என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.

இந்த போட்டி எங்கு, எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. மார்ச் 11-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பஞ்சாபை தவிர்த்து இதர 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

உத்தரபிரதேசத்தில் பாஜக 312 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதனை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து பாஜக வெற்றி பெற்றிருப்பதாக அந்த கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சியும் முன்வைத்தது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வாறு முறைகேடு செய்யலாம் என்பது குறித்து டெல்லி சட்டப்பேரவையில் அந்த கட்சி தரப்பில் அண்மையில் செயல்விளக்கம் செய்து காண் பிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, யாரா லும் அந்த இயந்திரங்களை ‘ஹேக்’ செய்ய முடியாது என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 12-ம் தேதி டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத் தில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இதனை மீண்டும் உறுதிபட தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறை கேடும் செய்ய முடியாது. இது தொடர்பான பொது சவாலுக்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களால் முடிந்தால் மின்னணு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து காட்டலாம். இந்த சவால் தொடர்பான கால அட்டவணை சனிக்கிழமை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விபாட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று செயல் முறை விளக்கம் அளிக்கப்படும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x