

கர்நாடக மாநிலத்தில் ஆம்னி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 3 பயணிகள் உடல் கருகி பலியாயினர். இதில் படுகாயமடைந்த 14 பேர் ஹூப்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ் ஒன்று 19 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து ஹூப்ளியை நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில், ஹூப்ளியை அடுத்துள்ள வரூர் அருகே சென்று கொண்டிருந்த பஸ்ஸின் கீழ் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியதில் பஸ்ஸில் தூங்கிக் கொண்டிருந்த 3 பயணிகள் உடல் கருகி பலியாயினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த 14 பேரை மீட்டு ஹூப்ளி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வரூர் போலீஸார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பயணிகள் புகைப்பிடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய ரசாயன பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.