Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

கேஜ்ரிவாலுக்கு பிரதமர், ஹசாரா, ராஜ்நாத் சிங் வாழ்த்து

டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பிரதமர் மன்மோகன்சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புதிய பொறுப்பை ஏற்கும் கேஜ்ரிவாலுக்கு தனது வாழ்த்து களையும் ஆதரவையும் தெரிவித்தார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஹசாரே கடிதம்

கேஜ்ரிவாலுக்கு வழிகாட்டி, குருவாக திகழ்ந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே, வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்..

அரசியலின் இறுதி லட்சியமே நாட்டுக்கு சேவை புரிவதுதான் என்று குறிப்பிட்டுள்ள ஹசாரே, கேஜ்ரிவாலுக்கும் அவருடன் பதவியேற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை கேஜ்ரிவால் கடந்த ஆண்டு ஆரம்பித்தபோது இருவரும் பிரிந்தனர். முன்னதாக, பதவியேற்ற கேஜ்ரிவால், தனது அரசியல் குருவான ஹசாரே பற்றி குறிப்பிடும்போது, ‘அரசியலை சாக்கடை என்று சொன்னவர் ஹசாரே, சாக்கடையை சுத்தம் செய்ய அதில் இறங்கித்தான் ஆக வேண்டும்’ என்றார் கேஜ்ரிவால்.

காங்கிரஸ்

வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றினால் ஆதரவை தொடர காங்கிரஸ் தயாராக இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வாழ்த்துகள் என்றார் காங்கிரஸ் பொதுச்செயலர் ஷகீல் அகமது.

ராஜ்நாத் சிங்

முதல்வர் கேஜ்ரிவாலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் ஒன்றாக கைகோத்து நிலையான ஆட்சியை வழங்கவேண்டும் என்பதே எங்களின் ஆவல். சொன்ன வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றட்டும் என்றார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்.

ஊழலை ஒழிக்க கம்யூனிஸ்ட் ஆதரவு ‘ஊழலை ஒழிக்கவும் மக்கள் நலனுக்காகவும் ஆம் ஆத்மி கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுக்கும். மிக முக்கிய பிரச்சினைகளில் இவ்விரு கட்சிகளின் நிலையும் ஒன்றானவையே’ என முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் டில்லி பிரிவு செயலர் திரேந்திர சர்மா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x