

காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இதனால், அங்கு 69-வது நாளாக நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகரின் சில பகுதிகளைத் தவிர, காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஓரிரு சம்பவங்களைத் தவிர நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜவுரி நகரத்தில், புனிதத்தை பாழாக்குதல் தொடர்பான சட்டம் குறித்த வதந்தி பரவியதால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
“வர்த்தக வாகனம் ஒன்றிலிருந்து ஒட்டகக் கறி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வதந்தி பரவியது. ரஜவுரியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனினும் நிலைமை கட்டுக்குள் உள்ளது” என மாவட்ட ஆட்சியர் சபிர் அகமது பட் மற்றும் ஐ.ஜி ஜானி வில்லியம் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம் பூர் மாவட்டத்தில், ராணுவ உடை யில் ஆயுதங்களுடன் சந்தேகத் துக்குரிய இரு நபர்கள் உலவுவதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.