ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்துத்துவா சக்திகளுக்கான பாடம்: உவைஸி தாக்கு

ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்துத்துவா சக்திகளுக்கான பாடம்: உவைஸி தாக்கு
Updated on
1 min read

Jallikattuprotest Lesson for Hindutva forces: Asaduddin Owaisi

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்கள் இந்துத்துவா சக்திகளுக்கான பாடம் என்று எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் உவைஸி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஜ்லீஸ் எ இத்தஹாத் உல் முஸ்லிமீன் கட்சித்தலைவர் உவைஸி, ''ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்துத்துவா சக்திகளுக்கான பாடம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது. இந்திய நாட்டில் ஒற்றைக் கலாச்சாரம் இருக்க முடியாது. நாங்கள் அனைத்து விழாக்களையும் கொண்டாடுவோம்'' என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஆறு மாதங்களுக்கு முன்னர் தி இந்து ஆங்கிலத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ''ஏன் பொது சிவில் சட்டம் என்பதைப் பிடித்துக் கொள்கிறோம்? இலங்கை போன்ற நாடுகளில் கூட முஸ்லிம்களுக்கு என்று தனிச்சட்டங்கள் உள்ளன. ஸ்காட்லாந்து, இங்கிலாந்திலும் 2 குற்றவியல் சட்டங்கள் உள்ளன.

பன்முகத்தன்மையே இந்த நாட்டின் வலிமை. பின் எப்படி நீங்கள் ஒரே சட்டம், ஒரே பண்பாட்டை புகுத்த முடியும்? இந்தியாவில் 100 வேறுபட்ட மொழிகளைப் பேசும் மக்கள் தொகுதி உள்ளனர், ஆயிரக்கணக்கான பண்பாடுகள் உள்ளன. பொதுச்சிவில் சட்டம் நல்லதல்ல'' என்று கூறியிருந்தார்.

தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பிரபலமானவர் உவைஸி என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in