Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM

அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் திருத்தம்: இந்தியாவுக்கு கனடா கோரிக்கை

அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கனடா தூதரக மூத்த அதிகாரி ரிச்சர்டு பாலே கூறியதாவது:

அணு சக்தி மூலம் தான் நிர்ணயித்த இலக்கு அளவுக்கு மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்திட வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கவேண்டும் என்றால் தனது அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் இந்தியா சில மாற்றங்களை செய்தாகவேண்டும்.

இந்தியா கொண்டு வந்துள்ள இந்த சட்டம் உலக அளவில் காணப்படும் அடிப்படை தரத்துக்கு முரண்பட்டதாகவே இருக்கிறது.

எனவே இந்தியா தனது சட்டத்தில் மாற்றம் கொண்டு வராவிட்டால் அது எதிர்பார்க்கும் அளவுக்கு தொழில் நுட்பங்களை வழங்க பெரிய அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வராது.

இந்திய சட்டத்தின்படி அணு உலையை இயக்குவோர் விபத்தால் ஏற்படக்கூடிய இழப்பீடாக

ரூ. 1500 கோடி வரை கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். அதே வேளையில் இந்த விவகாரத்தில் அணு உலையை இயக்குவோர் இழப்பீடு வழங்குவதில் உதவி நாடுவதற்கான உரிமை தரப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்த,ஷரத்தை சேர்த்தால் அணு உலை தயாரித்து வழங்குபவர்களிடம் அணு உலையை இயக்குவோர் (இதுவரையில் இந்திய தேசிய அணுமின் நிறுவனம்- என்பிசிஐஎல்) இழப்பீடு தொடர்பாக உதவி கோர முடியும்.

ஆயினும் அணு உலை வழங்கு வோருக்கு, ரூ. 1500 கோடி இழப்பீட்டு தொகையை ஏற்பது சாத்தியமா என்று அச்சம் இருக்கிறது.

பொதுநலன் சார்ந்த கொள்கையை வகுப்பது அரசின் சிறப்புரிமை என்பதில் சந்தேகம் இல்லை. அணு சக்தி திட்டத்தை விரிவுபடுத்த விரும்புவதாக கூறும் அரசு, மறுபுறம் அணு மின் சக்தி தொடர்பான தனது இலக்கை சாதிக்க முடியாத வகையில் கடினமான விதி முறைகளை கொண்டுவந்துள்ளது .கொள்கை விஷயத்தில் இன்னும் தெளிவு தேவை. அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவு படுத்தப் படவேண்டும். அணு உலையை வழங்குபவர்களாக இருந்தால் அவர்களுக்கு பிரச்சினை தான். துணை ஒப்பந்ததாரராக இருந்தாலும் பிரச்சினைதான்.

விபத்து ஏற்படும்போது யாருக்கு பொறுப்பு என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே இழப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்.

அடுத்த 2 ஆண்டுகளில் அணு சக்தி திட்டத்தை விரிவுபடுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதற்கு தேவையான மூலப்பொருளான யுரேனியம் அதனிடம் போதிய அளவில் இல்லை. ஆனால் கனடாவிடமோ தரம் வாய்ந்த யுரேனியம் உள்ளது. அணுசக்தி சார்ந்த தொழில்நுட்பங்களும் சாதனங்களும் உள்ளன. இதனால் இந்தியா,கனடா இரண்டுக்குமே ஆதாயம் கிடைக்கும் என்றார் பாலே.

கனடாவும் இந்தியாவும் 2010ல் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி யுரேனியம் விநியோகம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x