Published : 04 Mar 2015 05:18 PM
Last Updated : 04 Mar 2015 05:18 PM

பாலியல் பலாத்கார குற்றவாளி பேட்டியை ஒளிபரப்ப தடையை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்

சர்ச்சையைக் கிளப்பியுள்ள டெல்லி பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த உத்தரவு வரை நீடிக்கும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று டெல்லி நகர மேஜிஸ்ட்ரேட்டின் தடை உத்தரவை டெல்லி போலீஸ் இன்று மாநகர தலைமை மேஜிஸ்ட்ரேட் சஞ்சய் கனக்வால் முன்னிலையில் சமர்ப்பித்தது.

அந்த உத்தரவை வாசித்த கனக்வால், பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியை ஒளிபரப்புவதன் மீதான கட்டுப்பாடுகளை அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை நீட்டித்தார்.

இந்த உத்தரவை மீறி பேட்டியை ஒளிபரப்பு செய்பவர்கள் மீது டெல்லி போலீஸ் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் நீதிபதி கனக்வால் அனுமதி வழங்கியுள்ளார்.

டிசம்பர் 16, 2012-ல் நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பேருந்து ஓட்டுனர் முகேஷ் சிங் என்பவரின் பேட்டியை பிரிட்டிஷ் இயக்குநர் லெஸ்லி உட்வின் மற்றும் பிபிசி ஆகியோர் எடுத்தனர். அதில் முகேஷ் சிங் சர்ச்சைக்குரிய கருத்துகள் பலவற்றை தெரிவித்தார்.

இந்தப் பேட்டியை ஒளிபரப்புவதன் மீதான சர்ச்சையே இப்போது கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, குற்றவாளி களை படத்தின் தயாரிப்பாளர் திஹார் சிறையில் சந்தித்து பேட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டது எப்படி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

சர்ச்சை பேட்டி தொடர்பாக டெல்லி திகார் சிறை இயக்குநர் ஜெனரல் அலோக் குமார் வர்மா நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்மன் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், டெல்லி நீதிமன்றம் பேட்டியை ஒளிபரப்ப தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x