

நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட்டை ஹைதராபாத்தில் உள்ள சட்டப் பேரவையில் மாநில நிதி அமைச்சர் ஈடெல ராஜேந்தர் நேற்று தாக்கல் செய்தார். ரூ. 1 லட்சத்து 637 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தனி தெலங்கானா போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பே முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
தெலங்கானா மாநில பட் ஜெட்டில் விவசாய வங்கி கடனை ரத்து செய்ய ரூ. 4, 250 கோடியும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்கு ரூ. 2,282.86 கோடி, நீர்வள மேலாண்மைக்கு ரூ. 6,500 கோடி, சாலை வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 4,000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டு 1,000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கவும் பேரவை ஒப்புதல் அளித்தது. தெலங்கானா மாநிலம் உருவாக உயிர்த் தியாகம் செய்த 459 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாகவும் நிதி அமைச்சர் ஈடெல ராஜேந்தர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் தீவிரமாக விமர்சித்துள்ளன.