Last Updated : 21 Dec, 2013 09:20 AM

 

Published : 21 Dec 2013 09:20 AM
Last Updated : 21 Dec 2013 09:20 AM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு பெங்களுர் நீதிமன்றம் கடிதம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய நகைகளைக் கொண்டுவர உதவ வேண்டும் என தமிழக அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற பதிவாளர் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா முன்னிலை யில் கடந்த 12-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த‌து. அப்போது வழக்கு தொடர்பு உடைய ஜெய லலிதாவின் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை பெங்களூருக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற பதிவாளர் கர்நாடக அரசிடமும், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதன்பிறகு தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உதவியோடு சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பாதுகாப்பாக‌ பெங்களூர் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற பதிவாளர் கடந்த வாரம் கர்நாடக அரசின் தலைமைச் செயலருக்கும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்திற்கு பதில் கிடைத்ததும், தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் வியாழக்கிழமை அனுப்பி இருக்கிறார்.

அக்கடிதத்தில், ''சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்புடைய தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்ட 1066 சான்று பொருட்கள் அடங்கிய அசையும் சொத்துகள் சென்னை மத்திய ரிசர்வ் வங்கியில் இருக்கிறது.

அதனை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வர தேவையான சட்டரீதியான நீதிமன்ற உதவிகளையும், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்பு வசதிகளையும், தகுதியான அரசு அதிகாரிகள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவையும் உடனடியாக வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகே நகைகளை பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவதற்கான‌ ஏற்பாடுகள் செய்யப்படும். அத்தகைய பணிகள் நடைபெற‌ 15 நாட்களுக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் விசாரணை வருகிறது. அதேவேளையில் 'சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்புடைய அசையும் சொத்துகளை பெங்களூர் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது' என ஜெயலலிதாவின் தரப்பில் பெங்களூர் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x