Last Updated : 19 Sep, 2016 10:20 AM

 

Published : 19 Sep 2016 10:20 AM
Last Updated : 19 Sep 2016 10:20 AM

‘தலாக்’ முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு: மத்திய அரசு முடிவு

மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவாகரத்து செய்யும் நடை முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முஸ்லிம்கள் 3 முறை தலாக் என்று கூறி தங்கள் மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாக உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இது குறித்து 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர் மற்றும் மேனகா காந்தி உள்ளிட்டோர் கடந்த வாரம் கூடி ஆலோசனை நடத்தினர். இதில், 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடை முறையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வது என ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அரசு உயர் அதிகாரிகள் கூறும்போது, “தலாக் நடைமுறை முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தில் கூட இல்லை. பொது சிவில் சட்டம் என்ற ரீதியில் இந்தப் பிரச்சினையை அணுகப் போவதில்லை. பெண் களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமையும் பெண்களுக்கும் உள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x