Published : 01 Jun 2016 09:23 AM
Last Updated : 01 Jun 2016 09:23 AM
மாநிலங்களவையின் இரு கூட்டத் தொடருக்கு இடைப்பட்ட காலத்தில் உறுப்பினர் இறந்தால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கும் நடைமுறையை கைவிட மாநிலங்களவை முடிவு செய்துள்ளது.
என்றாலும் கூட்டத் தொடரின் போது உறுப்பினர் இறந்தால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கும் மரபு தொடரும்.
இது தொடர்பாக பொது நோக்கங்களுக்கான குழு அளித்த பரிந்துரையை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி, கூட்டத் தொடருக்கு இடைப்பட்ட காலத்தில் உறுப்பினர் இறந்தால், அடுத்த கூட்டத் தொடரின் முதல் நாளில் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படும் மரபு கைவிடப்படுகிறது. இதற்கு பதிலாக மறைந்த உறுப்பினருக்கு அவையில் அஞ்சலி செலுத்திய பின், 1 மணி நேரம் மட்டும் இனி அவை ஒத்திவைக்கப்படும்.
கூட்டத் தொடரின்போது, மத்திய அமைச்சர் ஒருவர் இறந்தால், அவரது மரணம் டெல்லியில் நிகழ்ந்தால், அவர் மாநிலங்களவை உறுப்பினராக இல்லாவிடினும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படும்.
கூட்டத்தொடரின்போது தேசிய கட்சி ஒன்றின் தலைவர் இறந்தால், அவர் மக்களவை உறுப்பினராக இருந்தாலோ அல்லது அவரது கட்சி மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தாலோ அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படும்.
நாட்டின் முக்கிய தலைவர்கள் அல்லது வெளிநாட்டுத் தலைவர் மரணம் அடையும்போது, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பது குறித்து அவை முன்னவருடன் ஆலோசித்து மாநிலங்களவை தலைவர் முடிவு எடுப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT