Published : 27 Jul 2016 11:55 AM
Last Updated : 27 Jul 2016 11:55 AM

டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சனுக்கு ரமோன் மகசேசே விருது

டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இரண்டு இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு 2016க்கான ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசசே நினைவாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. அரசுப்பணி, பொது சேவை, கலை, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசு என போற்றப்படுகிறது.

2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் 3 நபர்கள், 3 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா, சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன், டோம்பெட் த்வாஃபா, ஜப்பான் ஓவர்சீஸ் கூட்டுறவு தன்னார்வலர்கள், கோன்சிட்டா கேர்பியோ - மொரேல்ஸ், வியென்டைன் ரெஸ்க்யூக்கு இந்த ஆண்டின் மகசேசே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதாக டி. எம். கிருஷ்ணாவுக்கும், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் பெஸ்வாடா வில்சனுக்கும், 2016 -இன் மகசேசே விருதுகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த, எம்.எஸ்.சுவாமிநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் ரமோன் மகசேசே விருதைப் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x