Published : 21 Jan 2014 02:10 PM
Last Updated : 21 Jan 2014 02:10 PM

ராஜ்பாத் நோக்கி பேரணி: கேஜ்ரிவால் மிரட்டல்

மத்திய அரசைக் கண்டித்து இரண்டாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், தன் கோரிக்கையை ஏற்று டெல்லி போலீஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசு தின விழா நடைபெற உள்ள ராஜ்பாத் நோக்கி ஒரு லட்சம் ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய உள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் நிர்வாக அதிகாரத்தை டெல்லி அரசிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் 10 நாள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 2-வது நாளாக தொடர்ந்து டெல்லி ரயில் பவன் அருகே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இன்றும் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து கேஜ்ரிவால் கூறுகையில்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களை திறக்க உத்தரவிட்டும் அதனை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். மெட்ரோ ரயில் நிலையங்களை மூடச் சொன்னது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் என்றார்.

சமரசம் கிடையாது: இன்றைய போராட்டத்தின் போது பேசிய கேஜ்ரிவால், "போராட்டத்தை முடித்துக் கொள்ள சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இது டெல்லி பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் எந்த வித சமரசத்துக்கும் இடம் இல்லை. போராட்டம் தொடர்ந்து நடைபெறும். டெல்லியில் தினந்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சரால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x