பாஜகவுடன் நெருங்கும் ஜெயலலிதா: மார்க்சிஸ்ட் கட்சி தடுக்க முயற்சி

பாஜகவுடன் நெருங்கும் ஜெயலலிதா: மார்க்சிஸ்ட் கட்சி தடுக்க முயற்சி
Updated on
1 min read

பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நெருங்கி வருவதை தடுக்கும் பணியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக, டெல்லியில் நடத்தவிருக்கும் மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு அந்தக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மதவாத சக்திகளுக்கு எதிரான அந்தக் கூட்டத்தை இம்மாதம் 30-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடத்துவது குறித்து வியாழக்கிழமை டெல்லி சி.பி.எம். தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் அமர்ஜித் கௌர், சமாஜ்வாதி கட்சியின் பொது செயலாளர் ராம்கோபால் வர்மா, ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி, ‘மதவாதம் நம் நாட்டின் ஜனநாயகத்தை நாசமாக்கி விடும். அதிலிருந்து நம் நாட்டைக் காக்க இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு மாநாட்டை டெல்லியில் நடத்த உள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மதவாத சக்திகளை எதிர்த்து ஜெயலலிதாவும் போராடி வருகிறார். எனவே, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கும் அழைப்பு விடுத்தோம்’ என்றார் யெச்சூரி.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதாவுக்கு இருக்கும் நட்பு, கூட்டணியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள முயற்சியாக இது கருதப்படுகிறது.

சரத்பவாரை நோக்கி...

அக்டோபர் 30-ல் நடைபெற இருக்கும் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கூட்டணியுடன் மத்திய அமைச்சரவையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸிடமிருந்து சரத்பவாரை பிரிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in