Published : 23 Oct 2013 05:59 PM
Last Updated : 23 Oct 2013 05:59 PM

எனக்கு உயிர் பயம் இல்லை: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு

தன் பாட்டி, தந்தையைப் போலவே தானும் ஒருநாள் கொல்லப்படலாம் என்றும், அதுபற்றி தனக்குக் கவலையில்லை என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

ராஜஸ்தானில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “என் பாட்டி (இந்திரா காந்தி) கொல்லப்பட்டார். என் தந்தை (ராஜீவ் காந்தி) கொல்லப்பட்டார். இப்போது, நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். ஆனால், அதற்கு நான் அஞ்சவில்லை. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை. முசாபர்நகர் மக்களின் துயரத்தில் என் முகத்தைப் பார்க்கிறேன்.

என் இதயத்தில் இருந்து சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அப்போது, நான் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். என் ஆசிரியரிடம் ஒருவர் ரகசியமாக ஏதோ சொல்வதைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து, என்னை உடனடியாக வீட்டுக்குப் போகுமாறு என்னிடம் ஆசிரியர் சொன்னார். வீட்டுக்குச் சென்றபோது, எங்கள் பணியாளர்களின் அலறலைக் கேட்டேன். என் பாட்டிக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டது என்று யாரோ சொன்னார்கள்.

வீட்டுக்குச் சென்றபோது, சாலையில் என் பாட்டியின் ரத்தத்தையும், ஓர் அறையில் சவாந்த் சிங் மற்றும் பீந்த் சிங் ஆகிய இரு பாதுகாவலர்களின் ரத்தத்தையும் கண்டேன். அவர்கள் என்னிடம் எப்போதும் நட்புடன் பழகியவர்கள். அந்த நிகழ்வு என்னைத் தாக்கியது. என்னுடைய கோபம் தணிவதற்கு 10-ல் இருந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது.

என்னை சமீபத்தில் ஒரு எம்.எல்.ஏ. (பஞ்சாபைச் சேர்ந்தவர்) சந்தித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அவர் கொல்ல நினைத்ததாகவும், ஆனால் இப்போது கட்டியணைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார். அப்போதுதான், அரசியல் கட்சிகளால்தான் கோபம் தூண்டப்படுவதை உணர்ந்தேன். அதனால்தான் பாஜகவையும், அதன் அரசியலையும் எதிர்க்கிறேன்.

அரசியல் ஆதாயத்துக்காக, மக்களைக் காயப்படுத்தும் பாஜகவின் அரசியலை எதிர்க்கிறேன். அவர்கள் முசாபர் நகருக்குச் சென்று தீ மூட்டுவார்கள். அவர்கள் குஜராத்துக்குச் சென்று தீ மூட்டுவார்கள். உத்தரப் பிரதேசத்திலும் காஷ்மீரிலும் அதையே செய்வார்கள். நாம் அந்தத் தீயை நாம் தான் அணைக்க வேண்டும்.

இந்தியா ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். பாஜக மக்களைப் பிரிக்கிறது. ஆனால், இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.

வேலையில்லாத் திண்டாட்டமும், பசியும்கூட கோபத்தை உருவாக்கும். இவற்றை அழிப்பதற்கு நாங்கள் செயலாற்றி வருகிறோம். அதனால்தான் வேலை உறுதித் திட்டத்தையும், உணவுப் பாதுகாப்பு மசோதாவையும் கொண்டுவந்தோம்” என்றார் ராகுல் காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x