பாகிஸ்தானில் காணாமல் போன 2 இந்திய முஸ்லிம் மதகுருமார்கள் பத்திரமாக நாடு திரும்பினர்

பாகிஸ்தானில் காணாமல் போன 2 இந்திய முஸ்லிம் மதகுருமார்கள் பத்திரமாக நாடு திரும்பினர்
Updated on
1 min read

பாகிஸ்தானில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த 2 முஸ்லிம் மதகுருமார்கள் பத்திரமாக டெல்லி திரும்பினர்.

டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியா மசூதியின் தலைமை இமாம் சையது ஆசிஃப் நிஜாமி (80). இவர் தனது உறவினர் நஜீம் அலி நிஜாமியுடன் கடந்த 8-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்றார். பின்னர் 14-ம் தேதி லாகூர் சென்ற இவர்கள் இருவரும் காணாமல் போயினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, காணாமல் போன இருவரையும் பத்திரமாக மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தார். பின்னர் இந்த இருவரும் கராச்சியில் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இருவரும் திங்களன்று டெல்லி வந்தடைந்தனர். முன்னதாக, அவர்களது உறவினர்கள் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றனர்.

இதுகுறித்து ஆசிஃப் நிஜாமியின் மகன் அமிர் நிஜாமி கூறும்போது, “இந்த விவகாரத்தில் தலையிட்டு இருவரும் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நன்றி” என்றார். எனினும் அந்த இருவரும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in