வங்கிகளில் கடன்பெற விஜய் மல்லையாவுக்கு மன்மோகன் உதவினார்: பாஜக குற்றச்சாட்டு

வங்கிகளில் கடன்பெற விஜய் மல்லையாவுக்கு மன்மோகன் உதவினார்: பாஜக குற்றச்சாட்டு
Updated on
1 min read

வங்கிகளில் கடன்பெற தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உதவினார் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்களில் வெளியாகியுள்ள கடிதங்களை சுட்டிக்காட்டி பாஜக இதனை கூறியுள்ளது.

2011 – 2013-க்கு இடைப்பட்ட காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு விஜய் மல்லையா எழுதிய கடிதங்களை தொடர்ந்து, வங்கிகளில் அவர் கடன் பெறுவதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உதவியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வங்கிகள் கடன் வழங்குவதை விரைவுபடுத்தும்படி மல்லையா அக்கடிதங்களில் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வங்கிகளில் கடன் பெற விஜய் மல்லையாவுக்கு மன்மோகன் சிங் உதவினார். பெரும் கடன் தொகையை விஜய் மல்லையா எவ்வாறு பெற முடிந்தது? மூழ்கிவரும் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு மூழ்கி வரும் கப்பலான காங்கிரஸ் உதவி செய்துள்ளது. மல்லையா கடன்களை திரும்ப செலுத்தாத போதும் அவருக்கு மீண்டும் மீண்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

வங்கிகளில் கடனாகப் பெற்ற சுமார் ரூ.9 ஆயிரம் கோடியை கிங்பிஷர் நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு அந்நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையில் வங்கிகள் இறங்கின. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் மல்லையா பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in