Published : 26 Jan 2017 10:08 AM
Last Updated : 26 Jan 2017 10:08 AM
தெற்கு கோவா வாஸ்கோ நகருக்கு அருகில் சதா கிளைச் சிறை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு சிறு பிரச்சினை ஒன்றில் 49 கைதிகள் ஒன்றுசேர்ந்து சிறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். கண்ணில் தென்பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதன் தொடர்ச்சியாக சிறை அதிகாரி விட்டல் கவாஸை துரத்திச் சென்று அவரையும் 2 பாதுகாவலர்களையும் தாக்கினர்.
இந்த குழப்பத்தின்போது, வினாயக் கோர்பத்கர் என்ற கைதி கத்திக்குத்து காயம் அடைந்தார். மேலும் 9 கைதிகள் காயம் அடைந்தனர்.
சிறை தகர்ப்பு முயற்சியில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் சிறையின் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு சிறையின் முக்கிய வாயில் அருகே வந்தனர். அப்போது அவர்களை போலீஸ் படையினர் தடுத்து நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கத்திக்குத்து காயம் அடைந்த வினாயக் கோர்பத்கர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் இவர் வழியிலேயே உயிரிழந்தார். சிறை அதிகாரி விட்டல் கவாஸ் மற்றும் 2 பாதுகாவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலையில் கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட வினாயக் கோர் பத்கர், வட கோவாவில் உள்ள கோல்வலே சிறையிலிருந்து சதா கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டவர் ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT