Published : 16 Mar 2014 12:07 PM
Last Updated : 16 Mar 2014 12:07 PM

வாரணாசியில் போட்டி: நரேந்திர மோடி பெருமிதம்

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதில் தாம் பெருமிதம் கொள்வதாக, பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் உயர் மட்டக் குழு சனிக்கிழமை டெல்லியில் கூடியது. இந்தக் கூட்டத்துக்குப் பின், உத்தரப் பிரதேசத்தில் 55 வேட்பாளர்கள் உள்பட 98 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இரவில் வெளியிடப்பட்டது.

அதில், வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, கான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், வாரணாசி தொகுதி யாருக்கு என்ற சமீப காலமாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும், அருண் ஜேட்லி அமிர்தசரஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மோடி பெருமிதம்

பாஜகவின் அறிவிப்புக்குப் பின், நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், புனித தலமான வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதில் பெருமிதம் கொள்வதாகவும், இந்த வாய்ப்பை வழங்கியதற்காக கட்சிக்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கங்கை அன்னை ஆசியுடன் மக்களவைத் தேர்தலில் 'இலக்கு 272+' என்ற நோக்கத்தில் வெற்றி பெற்று, வலுவான இந்தியாவை உருவாக்க கட்சியினர் உழைக்க வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடியை எதிர்த்து கேஜ்ரிவால்?

வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இது குறித்து 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழுக்கு ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவைச் சேர்ந்த மனீஷ் சிசோதியா கூறும்போது, "வாரணாசியில் மோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் களமிறங்குவதற்கான வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இது குறித்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு விரைவில் இறுதி முடிவு எடுக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x