Last Updated : 10 Oct, 2013 12:35 PM

 

Published : 10 Oct 2013 12:35 PM
Last Updated : 10 Oct 2013 12:35 PM

எந்த நேரமும் காலியாகும் சந்திரபாபு நாயுடு மேடை!

தனித் தெலங்கானாவை எதிர்த்து டெல்லியில் உள்ள ஆந்திர பவன் வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு அங்கிருந்து எந்த நேரமும் அகற்றப்படலாம் எனத் தெரிகிறது.

ஆந்திர அரசின்கீழ் செயல்படும் ஆந்திர பவனின் ஆணையர் சார்பில் புதன்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. அதில், நாயுடுவை வளாகத்திலிருந்து காலி செய்ய டெல்லி போலீசாருக்கு கட்டளையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, டெல்லி போலீஸார் நாயுடுவை கட்டாயப்படுத்தி காலி செய்வதென முடிவு செய்துள்ளனராம். இதற்காக, மெல்ல மெல்ல வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளின் இடைவெளிகளை குறைத்துக்கொண்டு வரு கின்றனர். இது விரைவில் நாயுடுவை வளாகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான உத்தி எனக் கருதப்படுகிறது.

தனக்கு எதிராக நடத்தப்படும் நாயுடுவின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உண்ணாவிரதம் தொடங்கிய முதல் நாளே மத்திய அரசு முடிவு செய்து விட்டது. அதன் முதல் கட்டமாக, ஆந்திர பவனின் ஆணையர் அனுமதியின்றி நாயுடு அமர்ந்துள்ள வளாகத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் விடுத்தார்.

பிறகு புகாரை டெல்லி போலீசுக்கு அனுப்பியது ஆந்திர பவன். அதில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பவனில் இருக்கும் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவறை ஆகிய அவசிய வசதிகள் அங்கு தங்குபவர்களுக்கு மட்டும் என கூறி நாயுடுவிற்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து ஜெனரேட்டர், நடமாடும் கழிவறை என வெளியிலிருந்து வசதிகள் செய்து கொண்டார் நாயுடு.

டெல்லியில் உண்ணாவிரதம் ஏன்?

நாயுடுவுக்கு 2 நாள் முன்னதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரத் தலைநகரான ஐதராபாத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். எனவே, ஆந்திரத்தில் உண்ணாவிரதம் இருந்தால் எடுபடாது என்பதால் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார் நாயுடு.

ஆதரவு இல்லை!

அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுள்ள நாயுடுவுக்கு ஆதரவாக பெரிய கட்சிகள் எதுவும் களமிறங்கவில்லை. அசாம் கனபரிஷத் தலைவர் பிரபுல்ல குமார் மொஹந்தா மட்டுமே வந்து சந்தித்தார். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் தனிப்பட்ட நட்பிற்காக நாயுடுவை பார்த்து விட்டு சென்றார். பாஜக, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், தெலங்கானாவிற்கு ஆதரவளித்து நாயுடு கடிதம் எழுதியதாக கூறினார். இதை நாயுடு தரப்பு மறுக்க திக்விஜய் அதன் நகலை வெளியிட்டுவிட்டதால் உண்ணாவிரதத்தின் வேகம் குறைந்து விட்டது.

இந்நிலையில் ஆந்திரத்தி லிருந்து சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவாக அவரது தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் சுமார் 1500 பேர் டெல்லிக்கு ரயிலில் வந்து இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x